திருக்கோடிக்காவல் கிருஷ்ணய்யரும்-பூச்சி ஸ்ரீநிவாச அய்யங்காரும்.
ஒரு பழைய சங்கீத கட்டுரை-பூச்சி ஸ்ரீநிவாச அய்யங்கார் பற்றியது.
திருக்கோடிக்காவல் கிருஷ்ணய்யர் பிரபலமான வயலின் வித்வான். பெரிய பெரிய வித்வான்கள் எல்லாம் தங்களுக்கு திருக்கோடிக்காவல்
கிருஷ்ணய்யர் பக்கவாத்தியமாக அமைய மாட்டாரா என்று ஏங்குவார்கள். ஒரு நாள் பூச்சி ஸ்ரீநிவாச அய்யங்கார் கச்சேரி.
திருக்கோடிக்காவல் வயலின். அன்றைய கச்சேரியில் விஸ்தாரமாக "வராளி' ராகத்தை ஆலாபனை செய்தார் பூச்சி அய்யங்கார்.
ஆலாபனைக்குப் பிறகு திருக்கோடிக்காவல் கிருஷ்ணய்யருக்கு வயலின் வாசிக்க வாய்ப்பளிக்காமல் கீர்த்தனம் எடுத்துவிட்டார். தனக்கு
வாசிக்க வாய்ப்பளிக்கவில்லையே என்று கிருஷ்ணய்யருக்கு ஒரே வருத்தம். ஆனால் அதைக் காட்டிக்கொள்ளவில்லை. கச்சேரி முடிந்தது.
ராத்திரி கிருஷ்ணய்யர் தங்குவதற்கு ஏற்பாடு செய்திருந்த ஜாகைக்குப் போய் தனது பிடிலை எடுத்து "வராளி' வாசித்து தனது ஏக்கத்தை
தீர்த்துக் கொள்ள எத்தனித்தார். அப்படியே "வராளி'யில் லயித்து, உருகி வாசித்துக் கொண்டே இருந்தார் திருக்கோடிக்காவல் கிருஷ்ணய்யர்.
தலையில் ஒரு மஃப்ளரை கட்டிக்கொண்டு, அவர் இப்படி வாசிப்பார் என்பதை எதிர்பார்த்து கிருஷ்ணய்யர் தங்கியிருந்த ஜாகையின் வாசல்
திண்ணையில் உட்கார்ந்து அந்த "வராளி'யை ரசித்துக் கேட்டுக்கொண்டிருந்தாராம் பூச்சி ஸ்ரீநிவாச அய்யங்கார். வாசித்து முடித்து வயலினை
கீழே வைத்தபோது வாசலில் இருந்து "பேஷ் பலே' என்கிற ஆமோதிப்பைக் கேட்டு வெளியில் வந்து பார்த்த திருக்கோடிக்காவலுக்கு பூச்சி அய்யங்காரைப் பார்த்து ஒரே ஆச்சரியம்.
"உங்க மனோதர்மம் எப்படியிருக்குன்னு தெரிஞ்சுக்கத்தான் ஆலாபனை முடிஞ்சதும் நேரே கீர்த்தனைக்குப் போனேன். கட்டாயமா நீங்க
ஜாகைக்கு வந்து "வராளி' வாசிப்பேள்னு எனக்குத் தெரியும். அதுதான் வந்தேன். அங்கே வாசிக்கச் சொல்லியிருந்தா இப்ப வாசிச்ச
வாசிப்பைக் கேட்கற ஆனந்தம் எனக்கு கிடைச்சிருக்காதே' என்றாராம் பூச்சி அய்யங்கார்.