சத்யவ்ரதன் என்ற திராமிள (தமிழ் ) மன்னன் , தர்ப்பணம் செய்ய தனது கைகளில் ஆற்று நீரை அள்ளியபோது, அதில் மிக்க ஒளி பொருந்திய ஒரு சின்னஞ்சிறு மீன்குஞ்சு இருந்தது. அதை அந்த ராஜயோகி, ஆற்றில் மீண்டும் இட்டான்
( In the Bagavatham version, the river name is given as Kruthamaal ( vaigai river now)
அப்போது அந்த விசித்திர மீன்குஞ்சு அவனிடம் பேசியது. " அரசே! நான் ஒரு சிறிய மீன். என்னை பெரிய மீன்கள் விழுங்கி விடும் என்று உங்களுக்குத் தெரியாதா? என்னைக் காப்பாற்ற வேண்டாமா ? ' என்று கெஞ்சியது. ஆச்சர்யம் அடைந்த அந்த மன்னன், அனுதாபம் கொண்டு அந்த மீனை தனது கமண்டலத்தில் எடுத்துக் கொண்டு தனது ஆஸ்ரமத்திற்குச் சென்றான். சிறிது நேரத்தில், அந்த மீன் குஞ்சு மீண்டும் அவனை அழைத்து, ' ராஜனே! நீயே பார்! இந்த கமண்டலத்தில் எனக்கு நீந்தக் கூட இடமில்லை. சற்று பெரிய பாத்திரத்தில் என்னை விடுவாய். என்றது. அதற்கேற்ப சத்யவ்ரதன், அந்த மீனை ஒரு பானையில் இட்டான். மீணடும் சிறிது நேரத்தில், அந்த மீன் விரைவாக வளர்ந்து, அவனைக் கூப்ப்பிட்டு தன்னை ஒரு குளத்தில் விடச் சொல்லி கெஞ்சியது. அப்படியே செய்தபின்னரும், குளம் முழுவதும் நிறைந்து பெரிய உருவம் கொண்டு, என்னை ஒரு ஏரியில் விடுவாய். எனக்கு இங்கு இடம் போதவில்லை. என்றது. அவ்வண்ணமே சத்யவ்ரதன் ஒரு மாபெரும் ஏரியில் இட்டபின்னரும், அந்த மீன் பெரிதாக வளர்ந்து , என்னை ஒரு சமுத்ரத்தில் கொண்டு விடு என்று கேட்டது.
அப்போதும், அந்த விசித்திர மத்ஸ்யம், ஹாஸ்யமாக, ' இந்த மஹா சமுத்திரத்தில், திமிங்கிலம், சுறாமீன் போன்று ஏராளமாக இருக்குமே! நான் எப்படிப் பிழைக்கப் போகிறேன்?' என்று கேட்டது.
சத்யவ்ரதன் , அந்த மத்ஸ்யத்தை நமஸ்காரம் செய்து, " தேவரீர் ! தாங்கள் யார்? என்னை வைத்து தாங்கள் விளையாடியது , போதாதா? தாங்கள் ஸ்ரீ ஹரியா? எதற்கு இந்த வினோத தோற்றம்? நான் தெரிந்து கொள்ளலாமா ? ' என்று வேண்டினான். அப்போது அந்த மத்ஸ்ய ரூபம், ' இன்னும் சரியாக, ஒரு வாரத்தில், ஒரு மஹா பிரளயம் வரவிருக்கிறது. உன்னைப் போன்ற உத்தமர்களை காப்பாற்றிக் கரை சேர்க்கவே இவ்வர்று உரு மாறி வளர்ந்துள்ளேன். பிரளய காலத்தில், உன்னைக் காப்பாற்ற விரைந்து வருவேன். ' என்று கூறி மறைந்து விட்டது.
. அவ்வாறே ஒரு வாரத்தில், ஒரு மாபெரும் புயலும் இடைவிடாத பேய்மழையும் பெய்து , நிலம் முழுவதும் நீரில் மூழ்க நேர்ந்தது. அப்போது, ஸ்ரீ ஹரி , கட்டளை யிட்டபடி, நிலம் ஒரு பெரிய கப்பலாக வந்தது. சத்யவ்ரதனும், சப்தரிஷிகளும் அந்த கப்பலில் தஞ்சம் அடைத்தனர்
. ஆயினும், அந்தக் கப்பல் , புயலில் பயங்கரமாகத் தள்ளாடியபோது, பல்லாயிரம் காத நீளம் கொண்ட ஒளி மிகுந்த மாபெரும் மத்ஸ்யமாக ஸ்ரீ ஹரி அங்கு தோன்றி, ' அன்பர்களே! அஞ்ச வேண்டாம். இந்தக் கப்பலை எனது இரண்டு கொம்புகளில் கட்டிவிடுங்கள். நான் இந்த பூமியெனும் பெரும் கப்பலை இழுத்துக் கொண்டு பாதுகாப்பாக பயணிப்பேன். என்று சொல்லி, சான்றோர்கள் அனைவருக்கும், சமுத்திர விஸ்தாரத்தின், பல பகுதிகளையும், காட்டி, காப்பாற்றினார். சத்யவ்ரதன், அப்போது, ஹரியின் பெருமைகளை ஸ்தோத்ரம் செய்தான்.
பிரளயம் முடிந்த பின்னர் மீண்டும் சத்யவ்ரதனுக்கு ராஜ்யமும், மக்களும், ஜீவராசிகளும் முன்போலவே கிடைக்கவைத்து, ஸ்ரீ ஹரி மறைந்தார்.